பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரமடைந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 27 கிலோ நகைகள், ஆயிரம் ஏக்கர் நிலம் ஆகியவற்றை கர்நாடக கருவூலத்தில் இருந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம் வெள்ளி வைரம் நகைகளையும் 1562 ஏக்கர் நில பத்திரங்களையும் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச்.வி.மோகன் கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி. விமலா, கூடுதல் எஸ்.பி. புகழ்வேந்தன், இரு உதவி போலீஸ் கமிஷனர்கள், இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முப்பது போலீசார் மற்றும் ஆபரண மதிப்பீட்டாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் வந்தனர். நேற்று காலை 11.30 மணிக்கு ஆபரணங்கள் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. பகல் 1.45 மணி வரை 157 ஆபரணங்கள் மதிப்பீடு செய்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின் பகல் 3.05 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியது. மாலை 5.45 மணி வரை ஆபரணங்கள் மதிப்பீடு செய்து 296 பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசாரின் பாதுகாப்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு சொந்தமான வாகனத்தில் மீண்டும் ஆபரணங்கள் அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெயலலிதா நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நேற்று 6 மணி நேரமாக நடைபெற்றது. இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரமடைந்துள்ளது. அனைத்து நகைகளும் மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது.
The post ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரம்..!! appeared first on Dinakaran.