'உருது' பாட ஆசிரியர் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு

5 hours ago 2

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 'உருது' பாட ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. இந்த பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவர், 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை எனக் கூறி, ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து 2023-ம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஐகோர்ட்டு ஏற்கெனவே இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனக் கூறி, வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த அபராதத் தொகையை 4 வாரங்களுக்குள் பள்ளிக்கு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்த அதிகாரியிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Read Entire Article