
டெல்லி,
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஜுன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடப்பு ஆண்டு ஜி7 உச்சி மாநாடு கனடாவில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மார்க் கார்னி நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். அதேவேளை, காலிஸ்தான் ஆதரவு விவகாரத்தில் இந்தியா, கனடா இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி அழைக்கப்படவில்லை என தகவல் பரவியது.
இந்நிலையில், கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, பிரதமராக பதவியேற்றுள்ள கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இம்மாத இறுதியில் கனடாவின் கனன்ஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு கார்னி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளதாக தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க இம்மாத இறுதியில் பிரதமர் மோடி கனடா செல்கிறார்.