
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஜாமீனில் எடுக்க காலதாமதமானதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (50 வயது). இவரது மனைவி சரஸ்வதி (47 வயது). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் ஒரு வழக்கில் பால்ராஜ் சிறைக்கு சென்றார். இந்த நிலையில் தன்னை ஜாமீனில் எடுக்குமாறு பால்ராஜ், சரஸ்வதியிடம் கூறியுள்ளார். சில காரணங்களால் ஜாமீனில் எடுக்க காலதாமதமாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் ஜாமீனில் வெளியே வந்ததும், மனைவிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றார். சரஸ்வதி கூச்சல்போட அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் பால்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.