மதுரை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று (பிப்.25) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் க.சந்திரபோஸ், பா.பாண்டி, ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ், ரா.தமிழ் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர்.