சென்னை: ம.ம.க. கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது. கடந்த 1997-2000 ஆம் ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து ரூ.1.54 கோடி வரை பணம் பெற்றது தொடர்பாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, சையது நிஷார் அகமது மற்றும் நல்லா முகமது களஞ்சியம், ஜி.எம்.ஷேக் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கு சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், சையத் நிஷார் அகமத், ஜி.எம்., ஷேக் மற்றும் முகமது கலஞ்சிம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவஹருல்லா உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தார். மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.