
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மீது பாகிஸ்தான் இன்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் உள்ள ராணுவ தலங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் இன்று முயற்சித்தது. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள ராணுவ தலங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது. இந்த தாக்குதல் முயற்சியில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.