
இந்தியாவில் எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டுக்கு தனி மவுசு உண்டு. அதிலும் ஐ.பி.எல். 20 ஓவர் என்றால் அதை பார்க்க அப்படி ஒரு ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்டு. குறுகிய நேரத்தில் ஆக்ஷன் திரைப்படத்தை பார்ப்பதுபோல மிகவும் பரபரப்பாக, ஆட்டம் சூடுபிடிப்பதால் நாளுக்கு நாள் இந்த போட்டியை காண்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. ஆட்டம் முடிந்த பிறகும் கூட அதன் தாக்கம் முடிந்து விடுவதில்லை. அதைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசி கமெண்ட் அடித்துக்கொள்வார்கள். மேலும் கிரிக்கெட் வீரர்களுக்கென்று தனி ரசிகர்-ரசிகைகள் பட்டாளம் உண்டு.
சமீபத்தில் ஆமதாபாத்தில் நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து மகுடம் சூடியது. பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இதுதான் முதல் தடவை. அதாவது ஐ.பி.எல். தொடங்கிய 18 ஆண்டுகளில் பெற்ற முதல் பட்டம் இதுதான். விராட் கோலி போன்ற சூப்பர் ஸ்டார் அந்த அணியில் இருந்தும் கடந்த 17 ஆண்டுகளில் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் விராட் கோலியும், பெங்களூரு அணியும் சமூகவலைத்தளங்களில் நிறைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள். இதனால் இந்த முறை எப்படியும் கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு ஆடிய அவர்கள் வெற்றி பெற்று முத்திரை பதித்தனர்.
இந்த வெற்றியை பெங்களூரு நகரமே இரவு முழுவதும் தீபாவளி போல பட்டாசுகளை வெடித்தும், ஆடிப்பாடியும் கொண்டாடியது. மறுநாள் பெங்களூரு அணி வீரர்களை திறந்த பஸ்சில் நகரம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துவர திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் அந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த ஸ்டேடியத்தில் 35 ஆயிரம் பேர்தான் அமரமுடியும். ஆனால் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் என லட்சக்கணக்கானோர் அந்த ஸ்டேடியத்தை சுற்றிலும் கூடினர். எப்படியாவது தங்கள் கிரிக்கெட் கதாநாயகர்களை பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவலில் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்லமுயன்றனர். பலர் சுவர் ஏறி குதித்தனர். இந்த தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் எழுந்திருப்பதற்கு முன்பு பெருங்கூட்டம் அவர்கள் மேலேயே ஏறிச்சென்றது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.
வெற்றி கொண்டாட்ட கோலாகலம் சிறிது நேரத்தில் சோக களமாக மாறியது. கூட்ட நெரிசலில் இதுபோல உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்சம்பவமாக இருந்தாலும், அதில் இருந்து யாரும் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்வதுபோல தெரியவில்லை. இதுபோன்ற விழாக்களை நடத்தும்போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் மேலாண்மை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவேண்டும். எவ்வளவு பேர் வருவார்கள்? என்பதை முன்கூட்டியே கணித்து அவர்கள் விழா நடக்கும் இடத்துக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் வழிகளை திட்டமிட்டு தகுந்த போலீஸ் பாதுகாப்பு மட்டுமல்லாமல் தன்னார்வலர்களையும் பணியில் அமர்த்தவேண்டும். இந்த சம்பவத்தில் முதலில் கிரிக்கெட் வீரர்கள் பெங்களூரு நகரம் முழுவதும் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் அதை ரத்துசெய்து சின்னசாமி ஸ்டேடியத்தில் விழா என்று அறிவித்ததால்தான் கடல் அலை போல கட்டுக்கடங்காத கூட்டம் அங்கே கூடி இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது. ஆக இது சரியான திட்டமிடுதல் இல்லாததால் நடந்த சம்பவம்தான்.