சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனை எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு ‘அய்யகோ, திமுகவை பாருங்கள்’ என்று எழுதியிருந்தார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பவர் என்பதும், அவருக்கு கள்ள சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜாதான் என்பதும் விசாரணையில் தெரியவந்து, அந்த அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரிய வருகிறது; கைது செய்யப்படுகிறார்கள்.
“பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே” என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே ‘பேட்டர்ன்’தான். ஒரு அஜெண்டாவுடனேயே செயல்பட்டு வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு. ஆனால் சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே அரசை குறை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சொந்த கட்சியினர் குற்றத்தில் ஈடுபட்டது தெரிந்தால் அரசை குறை கூறி அறிக்கை வெளியிட்டு சம்பவத்தையே திசை திருப்புகிறார் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் appeared first on Dinakaran.