சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி, கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்த நிலையில், செவ்வாழை, நேந்திரன் உள்பட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேதத்தை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கடந்த ஒரு வாரமாக, அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், கோடை மழையால் வெப்பம் தணிவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், எடப்பாடி மற்றும் கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. எடப்பாடியில் மட்டும் 50.2 மிமீ., மழை பதிவானது.