சென்னை: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு சார்பிலும், ‘டாஸ்மாக்’ நிர்வாகம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் வீட்டில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விசாகன், அவரது குடும்பத்தினர் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்கின்றனர். விசாகன் பயன்படுத்தும் மடிக்கணினியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
The post டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.