
சேலம்,
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டர் ஜங்சன் அருகே சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சூரமங்கலம் தர்மன்நகரை சேர்ந்த கவுதம் (வயது 24), சந்தைபேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (23), பெரியார் நகரை சேர்ந்த அர்ச்சுனன் (27), பள்ளப்பட்டியை சேர்ந்த தனிஷ் (25), ஜான்சன்பேட்டையை சேர்ந்த தங்கபாண்டியன் (21), அய்யம்பெருமாள்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 760 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் இந்த மாத்திரைகளை எங்கு வாங்கினார்கள்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.