
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த 2024-ம் ஆண்டிற்கான குற்ற வழக்குகளில், பதிவான வழக்குகள் அவற்றின் தன்மை, மற்றும் வகைப்பாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பகுப்பாய்வின் வெளிப்பாடு கீழே வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக்கு எதிரான குற்றங்கள்:-
2023-ம் ஆண்டில் பதிவான ஆதாயக்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது, அதேசமயம் 2024-ம் ஆண்டில் இது 75 வழக்குகளாகும். இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில் 8 வழக்குகள் (10 சதவீதம்) குறைந்துள்ளன. இதேபோல், 2023-ம் ஆண்டில் பதிவான கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 133 ஆகவும், 2024-ம் ஆண்டில் 110 வழக்குகளாகவும் உள்ளது.
2023-ம் ஆண்டில் பதிவான கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 2,212 ஆகவும், 2024-ம் ஆண்டில் 1,839 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ல் கூட்டுக்கொள்ளை மற்றும் கொள்ளை வழக்குகள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு (இரண்டிலும் 17 சதவீதம்) குறைந்துள்ளது. இதேபோல், 2023-ம் ஆண்டை (17,788) ஒப்பிடும்போது 2024-ல் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை (15892 வழக்குகள்) குறிப்பிடத்தக்க அளவு (10.65 சதவீதம்) குறைந்துள்ளது.
சொத்து தொடர்பான குற்றங்கள்:-
தமிழ்நாட்டில் சொத்து தொடர்பான குற்றங்கள் குறிப்பாக ஆதாயக்கொலை, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற கடுமையான குற்றங்கள் 2024-ம் ஆண்டில் குறைந்துள்ளன. இதற்கு காவல்துறை மேற்கொண்ட பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகும்.
1. சொத்து தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை எனப்படுவது கைரேகைகள், புகைப்படங்கள் மற்றும் குற்றவாளிகளின் செயல்பாடுகள் போன்ற முக்கியமான தகவல்களைப் பகிர்வதில் ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் மற்றும் செயல்முறை குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்கான ஒரு முறையான அணுகுமுறை ஆகும்.
2. வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தீவிர நடவடிக்கைகள். குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனைகள், முந்தைய குற்றவாளிகளைச் சோதித்தல், நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகளை நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவான குற்றவாளிகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
3. வழக்கமான செயல்முறை குற்றவாளிகளைக் திருட்டுகளைத் தடுக்க அமாவாசை இரவு நேரங்களில் தீவிர இரவு ரோந்து.
4. கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான குற்ற வழக்குகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் குற்றப்பகுதிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப ரோந்து பணியினை தீவிரப்படுத்துதல்.
5. புதிய இடங்களில் சிசிடிவி பொருத்துவதன் மூலம் சிசிடிவி கண்காணிப்பை விரிவுபடுத்துதல்.
6. முந்தைய குற்றவாளிகளைக் கண்காணிக்க FRS (முக அங்கீகார அமைப்பு) செயலி மற்றும் ஸ்மார்ட் காவலார் செயலியை திறம்பட பயன்படுத்துதல்.
சட்டம்-ஒழுங்கு:-
2023-ம் ஆண்டில் உடலுக்கு எதிரான குற்றங்களில் (கொலை, கொலை முயற்சி, கொலை கொலையாத மரணம், காயம் மற்றும் கொங்காயம்) 49,286 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 2024-ம் ஆண்டில் இது 31,497 ஆகும். இதனால் 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில் 17,789 வழக்குகள் (36.12 சதவீதம்) குறைந்துள்ளன. குறிப்பாக, 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ல் கொலைகள் 110 வழக்குகள் (6.8 சதவீதம் குறைப்பு). குறைந்துள்ளன
2023 ஆம் ஆண்டில் பதிவான கலவர வழக்குகளின் எண்ணிக்கை 1305 ஆகவும், 2024-ம் ஆண்டில் 1,229 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ல் 76 வழக்குகள் (5.8 சதவீதம்) குறைந்துள்ளன.
மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கலவர வழக்குகள்:-
மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ரவுடிகளை திறம்பட கட்டுப்படுத்தியது ஆகியவற்றால் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக கொலை, காயம் மற்றும் கலவரங்கள் போன்ற கடுமையான வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
1. வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் வாகனச் சோதனைகள் மற்றும் சரித்திர குற்ற ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை சோதித்தல் மற்றும் கண்டு உணர் காவல்பணி ஆகியவற்றை மையமாகக் கொண்டு தீவிர சிறப்பு நடவடிக்கைகள்.
2. ரவுடி செயல்பாடு முறையாகக் கட்டுப்படுத்துதல் - வழக்கு விசாரணை, மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட தொடர்ச்சியான காவல் நடவடிகைகள் மூலம் மாநிலத்தில் ரவுடி செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
3. காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட ரவுடிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணிக்கு DARE (ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை) காவல் அலுவலர்களை நியமித்தல்.
4. ரவுடி செயல்பாடுகளை கட்டுப்படுத்த 550 தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர்.
5. விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள வழக்குகளில் மற்றும் தண்டனை பெற வாய்ப்புள்ள வழக்குகளாக, கடந்த 2023-ம் ஆண்டில் 48 வழக்குகளும், 2024-ம் ஆண்டில் 391 வழக்குகளும் கண்டறியப்பட்டன. இந்த வழக்குகள் மூத்த அதிகாரிகளால் தண்டனை பெறுவதற்காக விசாரணையை விரைவுபடுத்த கண்காணிக்கப்படுகிறது. இவற்றில் 2023-ம் ஆண்டில் 181 ரவுடிகளுக்கு ஏதிராகவும், 2024-ம் ஆண்டில் 242 ரவுடிகளுக்கு ஏதிராகவும் தண்டனை பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிராக 2023-ல் 85 ரவுடிகளுக்கு ஏதிராகவும், 2024-ல் 150 ரவுடிகளுக்கு ஏதிராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
6. பிணை நிபந்தனைகள் மீறப்படும்போது ரவுடிகள் பிணையை ரத்து செய்தல், அவர்கள் மேலும் ரவுடி செயல்படுகளில் ஈடுபடுவதைத் தடுத்தல். இவ்வாறாக பிணை நிபந்தனைகளை மீறிய ரவுடிகளுக்கு எதிராக 2023-ம் ஆண்டில் 18, 2024-ம் ஆண்டில் 68 பிணை ரத்து செய்யப்பட்டுள்ளன.
7. ரவுடிகள் தலைமறைவாகி, அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தால், வாரண்டில் உள்ள ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். கடந்த 2023-ம் ஆண்டில் 1, 2024-ம் ஆண்டில் 21 ஜாமீன்தாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8. மேலும் ரவடி கும்பல்கள்/ போட்டி கும்பல்கள் இடையே கொலைகளைத் தடுக்க, முந்தைய பழிவாங்கும் மற்றும் பகைமை கொண்ட கும்பல்கள் மற்றும் போட்டி கும்பல்களின் பட்டியல் தயார் செய்து தீவிரமாக கண்காணித்தல். கடந்த 2023-ம் ஆண்டில் 110 கொலை வழக்குகளும் 2024-ம் ஆண்டில் 63 வழக்குகளும் பதிவாகின, இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024-ம் ஆண்டில் 47 வழக்குகள் (42.72 %) குறைந்துள்ளன.
9. தடுப்புக்காவல் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 3694 சமூக விரோதிகளும், 2024 ஆம் ஆண்டில் 4572 சமூக விரோதிகளும் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
10. கொலைகள், உடலுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ரவுடி தொடர்பான வன்முறைகளை தடுப்பதற்காக முறையான, தரவுகளின் அடிப்படையிலான மற்றும் பல்துறை அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையின் இத்தகைய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2024-ம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன, குறிப்பாக கொலை மற்றும் ஆதாயக் கொலை ஆகியவை குறைந்துள்ளன. இது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.