செல்போனால் மனநிலை பாதிப்பு 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி: கோவையில் சோகம்

2 hours ago 1

கோவை: கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி, காவு பாரதி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி சிவமணி (64). இவர் வீட்டில் இருக்கும்போது அதிக நேரம் செல்போனில் வீடியோக்களை பார்த்து வந்ததாகவும், இதனால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நடராஜன் அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர் சில நாட்களுக்கு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து நடராஜன் அவரது மனைவி சிவமணியை கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் மகள் வீட்டிற்கு அழைத்து வந்தார். தொடர்ந்து இங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் தொலைந்துவிட்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு சிறிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து உள்ளனர். அது சிவமணிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவமணி 14வது மாடிக்கு காய போட்டு இருந்த துணிகளை எடுக்கச்சென்றார். அப்போது அங்கிருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழுந்தார். அதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post செல்போனால் மனநிலை பாதிப்பு 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி: கோவையில் சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article