
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சூடசந்திரா பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 23). ஆந்திராவை சேர்ந்த இவர் சூடசந்திராவில் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்கு தோழிகளுடன் சென்றிருந்தார்.
அப்போது அந்த கட்டிடத்தின் 13-வது மாடிக்கு சென்ற நந்தினி, அங்கிருந்து செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுக்க முயன்றார். அதாவது அந்த கட்டிடத்தில் தடுப்புச்சுவர் இல்லை. அவர் 13-வது மாடி கட்டிடத்தின் விளிம்பில் நின்று 'செல்பி' படம் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று 13-வது மாடியில் இருந்து நந்தினி கால் தவறி கீழே தரையில் விழுந்தார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் நந்தினி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா போலீசார் விரைந்து சென்று நந்தினி உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நந்தினி 'செல்பி' எடுக்க முயன்றபோது கட்டிடத்தில் இருந்து கால் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.