நன்றி குங்குமம் தோழி
உணவுகளை பார்க்கும் போது அதன் நிறம் சாப்பிடச் சொல்லி தூண்டச் செய்யும். அதே சமயம் உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் குறிப்பாக குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடல் நலம் தொடர்பான பல பிரச்னைக்கு வழிவகுக்கும் என்கிறார் குழந்தை நல நிபுணரான டாக்டர் சதீஷ்.
உணவுகளில் செயற்கை நிறங்களை சேர்க்கும் போது அவை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அதற்குப் பின்னணியில் பல ஆபத்துகளை சந்திக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரே தீர்வு இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்து அதனால் ஏற்படும் நன்மைகளும், செயற்கை நிறமுள்ள உணவினை உண்பதால் ஏற்படும் எதிர்மறை மாற்றங்கள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுகள் மட்டுமில்லாமல், இனிப்புகள், எரியேடெட் பானங்கள், பேஸ்ட்ரி உணவுகள், டின் உணவுகள் போன்றவற்றில் செயற்கை உணவு சாயங்கள் பொதுவாக கலக்கப்படுகின்றன. இதனை சாப்பிடுவதால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இது போன்ற உணவுகளை கருத்தில் கொள்வது அவசியம்.
உணவில் செயற்கை நிறங்களை சேர்ப்பதால், அவை உணவிற்கு ஒருவித நிறங்களை கொடுக்கும். இது உணவின் தோற்றத்தினை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு வகையான ரசாயனப் பொருட்கள். இது உணவின் சுவை மற்றும் நிறத்தினை மேம்படுத்துவதால், குழந்தைகள் அதனை விரும்பி உண்கிறார்கள். உணவு வண்ணங்களை இயற்கை மற்றும் செயற்கை என இரண்டு வகையாக பிரிக்கலாம். இயற்கையான முறையில் நாம் சாப்பிடும் உணவிற்கு நிறங்களை கொடுக்க முடியும். சிவப்பு நிறத்திற்கு பீட்ரூட் சாறு, மஞ்சளுக்கு மஞ்சள் தூள், பச்சை நிறத்திற்கு குளோரோபில் என இயற்கை மூலப் பொருட்களில் இருந்து பெற முடியும். இவை பாதுகாப்பானவை. பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. செயற்கை நிறங்கள் முற்றிலும் ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டு அவை உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
ரசாயன முறையில் தயாரிக்கப்படும் செயற்கை நிறங்கள் கொண்ட உணவுகள் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கும். மேலும், ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ள குழந்தைகள் இதனை சாப்பிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் மேலும் பாதிக்கக்கூடும் அபாயம் உள்ளது. அதனால் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது சிறந்தது. இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதினால் ஏற்படும் பிரச்னைகள்…
*ஒவ்வாமை, செரிமான பிரச்னை, மனநிலை மாற்றங்கள் ஏற்படும். இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
*ஹைபராக்டிவிட்டி, கவனக்குறைவு ஏற்படும். ஒரு இடத்தில் அவர்களால் அசையாமல் இருக்க முடியாது.
ஓடுவது, ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களை செய்வார்கள். ஒரு ெசயலில் கவனம் செலுத்த முடியாது.
இந்தப் பிரச்னைகள் சாதாரணமாக இருந்தாலும், நாளடைவில் அவர்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் உணவுப் பொருட்களை வாங்கும் முன் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை நிறமிகள் கொண்ட உணவினை தவிர்க்க வேண்டும். நம் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய உணவுகள் பற்றி தெரிந்து கொண்டு அதனை கொடுப்பதை அவசியமாக்க வேண்டும். இயற்கை உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் குழந்தை நல நிபுணர் டாக்டர் சதீஷ்.
தொகுப்பு: நிஷா
The post செயற்கை நிற உணவுகளும் ஆரோக்கிய பாதிப்பும்! appeared first on Dinakaran.