செம்மொழி நாள் விழா: தூத்துக்குடியில் மே 9-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

4 hours ago 1

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் வளர்ச்சித் துறையின் 2024-2025-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் "தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும்" என்று அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று செம்மொழி நாள் விழா முன்னிட்டு மாவட்ட அளவில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 9.5.2025 அன்று தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அது போன்று கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.5.2025 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவுசெய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்தில் சமூகநீதி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், கவிஞர் முத்தமிழறிஞர் கலைஞர், மொழியின் நாயகர் முத்தமிழறிஞர் ஆகிய 2 தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடைபெறும். இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் கடித இலக்கியம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், முத்தமிழறிஞர் கலைஞரின் ஆக்கமும்- செம்மொழித் தாக்கமும், தலைவர் கலைஞரின் தமிழ் தேசிய உணர்வு ஆகிய 2 தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடைபெறும்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article