சென்னையில் வெயில் இன்று உக்கிரமாக இருக்கும்; தமிழகத்தில் வரும் 17ம்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

3 hours ago 2

சென்னை: சென்னையில் வெயில் இன்று உக்கிரமாக இருக்கும் என்றும், அதேநேரம் தமிழகத்தில் வரும் 17ம்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், பகல் வெயில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதியில் உருவான காற்று ஒன்றாக இணையும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது பெய்யும் மழையால் வெக்கை குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது.

இருப்பினும் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. மாலை இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்கிறது. வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தில் பல பகுதிகளில் திடீரென கிளைமேட் மாறியது. குறிப்பாக சென்னையில் திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு ஒரு சில இடங்களில் லேசான மழை கொட்டியது. இதனால் பகல் முழுவதும் கொளுத்தி எடுத்த வெயில் அப்படியே சட்டென தணிந்தது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகாரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 17ம்தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை முதல் தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதன் தொடர்ச்சியாக கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவக் காற்று இரண்டு நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 13ம் தேதியில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோன்று, 16 மற்றும் 17ம்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில் 13ம் தேதி வரையில் இயல்பு நிலையில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்த நிலையில் பகலில் சில இடங்களில் மழை பெய்து வெக்கையிலிருந்து சற்று விடுதலை அளித்தது. சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேநேரம் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் வெயில் இன்று உக்கிரமாக இருக்கும்; தமிழகத்தில் வரும் 17ம்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article