
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை மறுநாள் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 140 மின்சார பேருந்துகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொடக்கமாக மின் பேருந்துகள் இயக்கம் அமையும். டீசல் பேருந்துகளால் ஏற்படும் காற்று மாசுகளை தவிர்க்க, இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
காற்று மாசு காரணமாக டெல்லி போன்ற மாநிலங்களில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை பல காலமாக பார்த்து வருகிறோம். உலக அளவில் மிகப்பெரிய முன்னெடுப்பாக எடுக்கப்படுகின்ற காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற முயற்சிக்கான மாற்றமாக இந்த திட்டம் அமையும்.
பேருந்துகளின் கொள்முதல் விலை கூடுதலாக இருந்தாலும் பயன்பாட்டுச் செலவு குறைவாகத்தான் இருக்கும். எனவே பயண கட்டணங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.