ஈரான்: வீரர்கள், அணு விஞ்ஞானிகளின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

6 hours ago 2

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் கெர்மன்ஷா மற்றும் தெஹ்ரான் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் உள்பட 100-ககும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

200-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். மூத்த ராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் அலி ஷாத்மனி, மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷீத் ஆகியோரும் பலியானார்கள்.

இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஈரானின் ஏவுகணை கிடங்கில் 3-ல் ஒரு பகுதி அழிக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில், ஈரானில் 627 பேர் பலியானார்கள். இதுபற்றி இஸ்ரேலின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, 30-க்கும் மேற்பட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், 11 மூத்த அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர் என்றார். இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது.

தெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில் அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடிகளுடன் சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. இறுதி ஊர்வலத்தில் ஈரான் ஜனாதிபதி மன்சூர் பெஜஸ்கியான் மற்றும் புரட்சி படையின் தலைவர் குவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதேபோன்று, நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோரும் கலந்து கொண்டனர். அவர்கள் கொடிகளை அசைத்தபடி காணப்பட்டனர். ஒரு சிலர் சவப்பெட்டியின் அருகே சென்று தொட்டு விட்டு வந்தனர். சிலர் ரோஜா இதழ்களை தூவினர்.

Read Entire Article