சென்னையில் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 132.91 கோடி முறை பெண்கள் பயணம்

12 hours ago 2

மகளிர் விடியல் பயணத் திட்டம் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை சென்னையில் மட்டும் சுமார் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக, மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணித்து வருகின்றனா்.

சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மாநகர போக்குவரத்துக்கழகம் உயா்த்தி உள்ளது.

இந்த நிலையில், மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை சென்னை மாநகர விடியல் பயண பேருந்துகளில் சுமார் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மகளிர் விடியல் பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 28-ம் தேதி 13.59 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயணம் மேற்கொண்ட பயணிகளை விட 23 சதவீதம் அதிகமாகும்.

Read Entire Article