சென்னை: “பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, இரு கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி நிகழும் மோதலை தடுக்க தகுந்த ஆலோசனைகளை வழங்கும்படி, இரு கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், மாணவர்கள் அமைப்புகளுக்கும் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.