மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. விமானத்தில் 148 பயணிகள், 6 ஊழியர்கள் என 154 பேர் இருந்தனர். அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. ஓடுபாதையில் விமானம் ஓட தொடங்கியபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இழுவை வண்டி மூலம், விமானத்தை இழுத்து கொண்டு வந்து புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகள், அனைவரும் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு விமானம் புறப்பட்டது. கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியது. 148 பயணிகள் உட்பட 154 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு appeared first on Dinakaran.