சென்னையில் 15 கி.மீ. தூரத்திற்கு கடல் மேல் பாலம்: சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

4 months ago 16

சென்னை,

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மும்பை அடல் சேது பாலம் போல தனுஷ்கோடி – இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுமா. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலங்கரை விளக்கம் முதல் மாமல்லபுரம் வரை பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், சுற்றுச்சூழல் பாதிப்பு இவற்றால், இலங்கையுடன் இந்தியாவை இணைக்கும் பாலத்திட்டம் கனவுத்திட்டமாகவே இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்த போது, தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாதை அமைக்கலாம் என்ற யோசனையை இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது.

மேலும், கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கி. மீ தூரத்திற்கான கடல் மேல் பாலம் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தாயார் செய்யும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை ஆணையம் மூலம் முதல் கட்டமாக சென்னை மற்றும் பிற மாநகராட்சி பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் மேல்மட்ட சாலை அமைக்கப்படும் என்று பதில் அளித்தார்.

Read Entire Article