சென்னை: லண்டனில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகலில் புறப்பட்டு, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மற்றும் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு, லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், லண்டன் பயணிகள் மட்டுமின்றி பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவிஸ்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் இருந்தனர். சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நேற்று சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க இருந்தனர்.
இந்த நிலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு வரவேண்டிய விமானம் வரவில்லை என்பதால், சென்னையில் இருந்து நேற்று லண்டன் புறப்பட்டு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து என்று பயணிகளுக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விமான நிலையத்திற்கு வரவில்லை. தகவல் கிடைக்காத சில பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், சென்னையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு, தூத்துக்குடி செல்லும் தனியார் பயணிகள் விமானம் மற்றும் தூத்துக்குடியில் இருந்து நேற்று பகல் 1.45 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய தனியார் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகளும் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடிக்கு இந்த தனியார் பயணிகள் விமான நிறுவனம், கடந்த 30ம் தேதியில் இருந்து தான் புதிதாக விமான சேவையை தொடங்கியது. இந்த நிலையில் விமான சேவை தொடங்கி 2 நாட்களிலேயே, விமானம் ரத்து செய்யப்பட்டது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நிர்வாக பிரச்னை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்து விட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி செல்லும் விமானம் ரத்து குறித்து அந்த நிறுவனமும் நிர்வாக பிரச்னை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த விமானத்தில் செல்ல இருக்கும் பயணிகள் இன்று பிற்பகல் விமானத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது,’’ என்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.