சென்னை வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் நவ.19ல் தீர்ப்பு: ஐகோர்ட் கிளை தகவல்

2 months ago 11

மதுரை: சென்னை வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில், மதுரை நீதிமன்றம் வரும் 19ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்தவர் பிரபல வழக்கறிஞர் காமராஜ். மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித்எழில்மலையின் மருமகனான இவர், கடந்த 2014ல் ஓட்டேரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது, கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியதையடுத்து, இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு முதல் வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி அவரது சகோதரி மேரி தேன்மொழி கடந்த 2021ல் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதில், 3 மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவானது. ஆனாலும், விசாரணை தொடர்ந்தது. தனது சகோதரர் கொலை வழக்கின் விசாரணை, மதுரை நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக நடைபெறுவதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறும் உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மேரி மீண்டும் மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில், 2014ல் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை 2015ல் மதுரைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2021ல் விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை விசாரணை முடியவில்லை. குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து உத்தரவிட வாதிடப்பட்டது. அப்போது, வழக்கு விசாரணை ஏன் தாமதமாகிறது என்பது குறித்து மாவட்ட நீதிபதி தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் விளக்கம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கின் விசாரணை முழுமையாக முடிந்துவிட்டது. வரும் நவ.19ம் தேதி(நாளை மறுநாள்) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி, இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம். உரிய நேரத்தில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.

The post சென்னை வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் நவ.19ல் தீர்ப்பு: ஐகோர்ட் கிளை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article