
சென்னை,
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் தமிழகத்தின் புதிய பா.ஜ.க. தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார். இதன் பிறகு, புதிய தலைவர் யார் என பல பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இச்சூழ்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார். இதனால் புதிய மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுதும் உள்ள தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இந்தநிலையில், இன்று (ஏப்.10) இரவு சென்னை வரும் மத்திய மந்திரியை அமித்ஷாவை தமிழக பாஜக நிர்வாகிகள் 35 பேர் வரவேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 35 நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பாஜக உட்கட்சி தேர்தல், கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. தேசிய தலைவர் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில தலைவர் தேர்தலும் நடக்க உள்ளது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், நாளை (எப்.,11) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.