சென்னை: சென்னை ஐஐடியில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சி ‘‘இன்வென்டிவ் -2025’’ ஒன்றிய கல்வி இணைஅமைச்சர் சுகந்தா மஜூம்தார் தொடங்கி வைத்தார். இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சியை, சென்னை ஐஐடி வளாகத்தில் ஒன்றிய கல்வி இணைஅமைச்சர் சுகந்தா மஜூம்தார் இன்று காலை தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து ஒன்றிய அரசின் கல்வி தரவரிசையில் இடம் பெற்றுள்ள 87 உயர்கல்வி நிறுவனங்கள், கண்காட்சியில் அரங்குகளை காட்சிக்கு வைத்திருக்கின்றன. இந்த கண்காட்சியில் முதன்மையான கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தலைப்புகளிலான கருத்தரங்குகளும் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது ஆராய்ச்சி குறித்த தகவல்களை கண்காட்சியாக வைத்திருக்கின்றன.
இன்றும், நாளையும் கண்காட்சி நடைபெறக்கூடிய இந்த கண்காட்சியில், தொழில் முனைவோர், தொழில்துறையினர் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகிய மூன்று தரப்பினரும் ஒரே இடத்தில் சந்திப்பதன் மூலம், தொழில்துறையினரின் தேவையை உயர்கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. மேலும் தொழில் முனைவோரின் கண்டுபிடிப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இந்த கண்காட்சி வாய்ப்பாக அமையும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தொடக்க விழாவில் காணொளி வாயிலாக உரை நிகழ்த்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்: இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றில் தமிழகம் குறிப்பிடத்தக்க பங்கை பதிக்கிறது. தொழில்துறையினரும் உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே இடத்தில் சந்திப்பது பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூசம்தார் கூறுகையில்: தமிழ்நாடு உயர்கல்வியில் மட்டுமில்லாமல், உற்பத்தி, ஆராய்ச்சி ஆகியவற்றிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. சென்னை ஐஐடி தொடர்ந்து பல ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. 1.2 லட்சம் கோடி, கல்விக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில் முனைவோர்கள் உலக சந்தைக்கு செல்ல இது போன்ற நிகழ்வுகள் வழி வகுக்குமென்றால் அதோடு ஒருங்கிணைந்து செயல்படுவோடும். இவ்வாறு அவர் பேசினார். கண்காட்சி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐஐடி பேராசிரியர்கள் மனுசந்தானம் மற்றும் சாரதி ஆகியோர் கூறுகையில்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சுகாதாரத்துறை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த புதிய திட்டங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஐஐடி பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களோடு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் புரிந்துனர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post சென்னை ஐஐடியில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சி: ஒன்றிய கல்வி இணைஅமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.