
சென்னை,
'அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில், நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
'படம் சூப்பர்' என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். 'அயோத்தி', 'நந்தன்' படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக 'டூரிஸ்ட் பேமிலி' படம் பார்த்து, "சூப்ப்ப்பர் சசிகுமார்..." என அழுத்திச் சொன்னார்.
"தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்..." என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 'டூரிஸ்ட் பேமிலி' படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி ... சார்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.