சூனாம்பேட்டில் தாழ்வான பகுதிகளில் சேதமடைந்த சாலைகள்: உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

6 months ago 15

செய்யூர்: சூனாம்பேடு பகுதியில் தாழ்வான பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கடும் மழைக்காரணமாக சேதமடைந்தன. இதனால், தாழ்வான சாலை பகுதிகளில் உயர்மட்ட மேம்பலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் இருந்து புதுப்பட்டு செல்லும் சாலை 1.6 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இச்சாலை வழியாக தினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த தார் சாலை கடந்த பல வருங்களுக்கு முன் போடப்பட்டது.

மேலும், இந்த சாலை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் மழைநீரானது சாலை மீது பெருக்கெடுத்து செல்லும். இதனால், சாலை நாளுக்கு நாள் தரம் இழந்து போனதோடு மழைக்காலத்தில் சாலை துண்டிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெள்ளங்கொண்டகரம் கிராமம் வழியாக 3 கிலோ மீட்டர் வரை சுற்றிக்கொண்டு சூனாம்பேடு வந்து செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பெஞ்சல் புயலில்போது பெய்த கனமழையால் இந்த சாலை அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் சேதமடைந்ததோடு ஆங்காங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவசர காலங்களில் இந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இதர வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உருவாகியுள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்தெழுந்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையில் பழுதான தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிய உயர்மட்டம் கட்டி புதிய தார் சாலை உயர்த்தி அமைத்து தர வேண்டும். மேலும், தாழ்வான சாலை உள்ள பகுதிகளில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post சூனாம்பேட்டில் தாழ்வான பகுதிகளில் சேதமடைந்த சாலைகள்: உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article