
கார்ட்டூன்,
சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் கடந்த ஜனவரி 2025 முதல் 7,700 க்கும் மேற்பட்ட காலரா பாதிப்புகளில், 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகி உள்ளன. ஆனால், வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சூடானில் காலரா நோய் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், குறிப்பாக கடந்த 2 நாட்களில் தலைநகரான கார்ட்டூமில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலரா நோய் பரவல் கை மீறிச் சென்றுள்ள நிலையில், அங்கு சுமார் 10 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் எச்சரித்துள்ளது.