ஊட்டி, மே 21: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஆர்கிட் மலர்கள், லில்லியம் மலர்கள் வாடாமல் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 127வது மலர் காட்சி கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்த மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சியில் இரண்டு லட்சம் மலர்களால் ஆன பண்ணையை அரசர் கால அரண்மனை அலங்காரம், அரண்மனை நுழைவு வாயில் ஆகிய மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்ன பறவை, ரதம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் மொத்தம் 7 லட்சம் கார்னேசன் மலர்கள், ரோஜா, கிராசந்திமம் உள்ளிட்ட மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு வண்ண வண்ண விளக்குகளால் பூங்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 200 லில்லியம் மலர்கள், 100க்கும் மேற்பட்ட தொட்டிகளில் ஆர்க்கிட் மலர்கள் ஆகியவைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில், ஆர்கிட் மலர்கள் வாடாமல் அழகாக காட்சியளிக்கிறது. அதேபோல லில்லியம் மலர்களும் பூத்துக்குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச்செல்கின்றனர். குறிப்பாக, அரிதாக காணப்படும் ஆர்கிட் மலர்கள் முன் நின்று புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
The post சுற்றுலா பயணிகளை கவரும் பல வகை ஆர்கிட் மலர்கள் appeared first on Dinakaran.