சுரண்டை அருகே வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது

2 months ago 8

சுரண்டை : சுரண்டை அருகே வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த 2பேர் கைது செய்யப்பட்டனர். சொந்த ஊரிேயே கைவரிசை காட்டிய அவர்களிடமிருந்து நகை, பணம் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், சுரண்டை அடுத்து உள்ள வீ.கே.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கழுநீர்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த மாரிபாண்டியன் மகன் மாடசாமி (45). இவர் கடந்த 27ம் தேதி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சின்ன கோவிலாங்குளம் பகுதியில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி கும்பிடச் சென்றுள்ளார்.

மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து சுமார் 10 பவுன் தங்க நகைகள், இரண்டு வெள்ளி கொடி, பணம், நில பத்திரங்கள், பள்ளி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் திருட்டு போனது கண்டு மாடசாமி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை அதிகாரிகளான சுரண்டை காவல் ஆய்வாளர் செந்தில், வீ.கே.புதூர் உதவி ஆய்வாளர் பவுல், தனிப்பிரிவு காவலர் வேலாயுதம், காவலர்கள் சகாதேவன், பிரவீன் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு, மாவட்ட சைபர் க்ரைம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.

சந்தேகத்தின்பேரில் கழுநீர்குளம் நேதாஜி தெருவைச் சேர்ந்த முப்புடாதி மகன் வேல்சாமி என்ற கண்ணன் (37) மற்றும் கழுநீர்குளம் பாண்டியன் தெருவைச் சேர்ந்த சைவம் மகன் மாரிபாண்டியன் என்ற சைசா (39) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், மாடசாமி குலதெய்வ கோயிலுக்கு சென்றதை அறிந்து கொண்டு இருவரும் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து வீட்டு கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருடிய நிலப்பத்திரங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை அருகில் உள்ள கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டனர். மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் பாராட்டினர்.

The post சுரண்டை அருகே வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article