ஹைதராபாத் : சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம். இதனால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோனது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போது எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவர் கனிம சுரங்க தொழில் செய்து வந்தார். பெல்லாரி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சுரங்கங்களை நடத்தி வந்தார். இதனிடையே அவர் மீது கனிம வள சுரங்க முறைகேடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு விசாரித்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 3,400 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 219 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சுரங்க முறைகேடு தொடர்பாக 14 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஐதாராபாத் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதில், சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்தன ரெட்டி உட்பட 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் ஜனார்த்தன ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
The post சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!! appeared first on Dinakaran.