
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் திருப்பத்தூரை சேர்ந்த பெண்ணை கடந்த 1½ வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் மூலம் மிரட்டல் வருவதாக கூறி மணிமாறன் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவரது காதல் மனைவியுடன் தஞ்சம் அடைந்தார்.
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 24 வருடங்களாக சமூக சேவை செய்து வருகின்றேன். தேசிய விருதுகள், மாவட்ட விருதுகள் போன்றவை சமூக சேவைக்காக நான் பெற்று உள்ளேன். திருப்பத்தூரை சேர்ந்த பூர்ணிமாவும், நானும் கடந்த 1 ½ வருடங்களாக காதலித்து வந்தோம். பூர்ணிமாவின் முழு சம்மதத்துடன் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் காதல் திருமணம் செய்து கடலூரில் உள்ள பதிவுத்துறையில் பதிவுத் திருமணம் முறைப்படி செய்து கொண்டோம். இந்த நிலையில் எனது மனைவியின் குடும்பத்தாரிடம் இருந்து மிரட்டல்கள் மற்றும் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. எனவே எங்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.