சுப்ரீம் கோர்ட்டில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

1 day ago 2

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வந்த 3 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அந்தவகையில் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி சந்துர்கர் ஆகிய 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்குமாறு கடந்த 26-ந்தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அதன்படி மேற்படி 3 நீதிபதிகளையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் என்.வி.அஞ்சரியா, விஜய் பிஸ்னோய், சந்துர்கர் ஆகிய 3 பேரும் நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகள் 3 பேருக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். புதிதாக பதவியேற்றுள்ள 3 பேரையும் சேர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உள்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தனது முழு பலத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் எட்டியுள்ளது.

Read Entire Article