
லீட்ஸ்,
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து அசத்தினார். முதல் டெஸ்டின் 2வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
களத்தில் நாங்கள் (சுப்மன் கில்லும், நானும்) நிறைய பேசினோம். ஒவ்வொரு செஷனாக விளையாட முயற்சித்து முடிந்தளவுக்கு நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்தோம். குறிப்பாக சுமாரான பந்துகள் வரும் போது அதை அதிரடியாக சரியான இடத்தில் அடிக்க வேண்டுமென்று பேசினோம். அந்த வகையில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தோம். எங்களுக்கு இடையே நல்ல நட்புறவு இருந்தது.
சுப்மன் கில்லுடன் பேட்டிங் செய்தது சிறப்பாக இருந்தது. அவரும் நன்றாக பேட்டிங் செய்தார். குறிப்பாக மிகவும் அமைதியான பொறுமையான வழியில் விளையாடும் அவருடன் நானும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்தேன். அவரது தலைமையில் உற்சாகமாக விளையாடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.