
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை அள்ளிக்குளத்தில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் எந்த தண்டனை குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2ம் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை விசாரிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை அவற்றை சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கவில்லை எனக்கூறி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.