
சென்னை,
'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' படங்கள் மூலம் தமிழ் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்குகிறார். இதில், ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'வேட்டை நாய்' என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளார் சுதா கொங்கரா. அதில் கதாநாயகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது சிம்பு அடுத்தடுத்து 3 படங்கள் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படங்களில் நடித்து முடித்த பின்னரே சுதா கொங்கராவின் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.