சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

1 day ago 2

சென்னை: சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள 46 சுங்கச் சாவடிகளில் 3 முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட கட்டணம் நேற்று முதல் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019 முதல் 2024 மார்ச் முடிய ரூ.15 ஆயிரத்து 414 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக ரூ.3000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில் மேலும் மூன்று முதல் 12 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது சட்டபூர்வ கொள்ளையாகும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரிய, சிறிய வாகனங்கள், குறிப்பாக பொருள் போக்குவரத்து வாகனங்கள் செலுத்தும் கட்டணம் உயர்ந்து வருகிறது. கடந்த 2022ம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் 2023ம் நிதியாண்டில் 41 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இனி நாளொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதன் விளைவாக அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து மக்கள் தலையில் சுமையாக விழுவது பற்றி கவலைப்படாத பாஜக ஒன்றிய அரசு, இதன் மூலம் பெரும் குழும நிறுவனங்களின் லாபம், மேலும் லாபம் பெறுவதை ஆதரித்து நிற்கிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத சுங்கக் கட்டண உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டனம் தெரிவிப்பதுடன், அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.

The post சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article