
பக்தியுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காக கோவில்களில் அன்னதானம் திட்டம் கொண்டு வரப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 13 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 கோவில்களில் ஒரு வேளை அன்னதானமும் நடந்து வருகிறது.
கோவில்களில் தயாரித்து வழங்கப்படும் இத்தகைய பிரசாதம், அன்னதானம் தரத்துடன் இருப்பதை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் அவ்வப்போது ஆய்வு செய்து, தர சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
அந்தவகையில், இந்தியா முழுவதும் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுவரும் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் தமிழகத்தில் 523 கோவில்களுக்கு தர சான்றிதழ்களை வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக அதிகமான தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் கோவில்களுக்கும் தர சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியை தற்போது இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
கோவில்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களில் இருந்து ரூ.1,054.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.