சென்னை: ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்’ என்று பெரியார் நினைவகம் திறப்பு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெரியார் நினைவகம், நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’ என்று அழைப்பதுபோல், தமிழக மக்கள் ஈ.வெ.ராவை ‘பெரியார்’ என்று அழைக்கின்றனர். ‘பெரிய’ ஆள் என்ற சொல்தான் பெரியாராக மாறியது. சுதந்திரம் மற்றும் சமூக சீர்திருத்த சிந்தனையாளரான பெரியார், உழைப்பாளி வர்க்கத்தினர், கம்யூனிஸ்ட் அமைப்பினருடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார். எம்.சிங்காரவேலு, ப.ஜீவானந்தம் ஆகியோருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.