சீரடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று வேலூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்

6 hours ago 2

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்கிறார். அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் வருகிறது.

ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். அங்கிருந்து காரில் வேலூர் நகருக்கு வரும் அவருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் அவர், காணொலி காட்சி மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார். பின்னர் அங்கு வைத்து அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திக்க உள்ளார். அங்கிருந்து மாலை 5 மணியளவில் காரில் புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொரப்பாடி, அரியூர், ஊசூர் சாலை வழியாக அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் சந்தைமேட்டிற்கு செல்கிறார்.

அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயம், நூலகம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை ஆகியவற்றை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சாலை மார்க்கமாக கந்தனேரி, பள்ளிகொண்டா, ஆம்பூர், வாணியம்பாடி வழியாக சென்று ஜோலார்பேட்டையில் பொதுமக்களை சந்திக்கிறார்.

பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி சிலையை இரவு 8 மணியளவில் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து அவர், திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளை மறுதினம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.18 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்றடைகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. தேவராணி, போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன், ஸ்ரேயா குப்தா, விவேகானந்த சுக்லா, சுதாகர் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 4,500 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Read Entire Article