
சென்னை,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது. திருமணத்தையொட்டிய சங்கீத் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருக்கிறது.
மறைந்த நடிகர் சிவாஜிக்கு தேன்மொழி, சாந்தி என இரண்டு மகள்கள் மற்றும் ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம்குமாருக்கு துஷ்யந்த் மற்றும் இரட்டைக் குழந்தைகளான தர்ஷன் மற்றும் ரிஷ்யன் என மூன்று மகன்கள். துஷ்யந்த் சக்சஸ் படத்தின் மூலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார் . இவர்களில் ரிஷ்யன் வெளிநாட்டில் படித்து விட்டு அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது.
தர்ஷனுக்குமே சினிமா ஆர்வம் வர புனே திரைப்படக் கல்லூரி மற்றும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா ஆகிய இடங்களில் பயிற்சி எடுத்திருக்கிறாராம். படித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே மேடை நாடகங்களிலும் நடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். சினிமாவில் நடிப்பதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு பூஜா என்கிற பெண்ணை தர்ஷன் காதலித்ததாகத் தெரிகிறது. தர்ஷன் பூஜா இருவருமே தங்கள் காதலை வீட்டுக்குத் தெரியப்படுத்தி முறைப்படி திருமணத்துக்கு அனுமதி வாங்கிய நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக அன்னை இல்லத்தில் வைத்தே நடந்தது. ராம்குமார், பிரபு குடும்பத்துக்கு நெருக்கமான சில உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குடும்ப பிரச்சனை சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவாஜி கணேசனின் பூர்வீக வீடான அன்னை இல்லத்தை அவருடைய மகன் வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்வதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இது சினிமாத்துறையினரை மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களையும் வருத்தம் அடைய செய்தது.