சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 21, 22ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைகிறதா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்யும்போது, அந்தந்த மாவட்டங்களில் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் வருகிற 21 மற்றும் 22ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி ஜனவரி 21ம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். காரைக்குடியில் அன்று இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 22ம் தேதி காலை சிவகங்கை வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து சிவகங்கை அரசு கலை கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் வரும் 21, 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு appeared first on Dinakaran.