சென்னை: சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை டிஜிபி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வை.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி, செல்போன் வைத்திருந்ததாக கூறி இருவரையும் சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், சிறையில் திடீரென சோதனை நடத்திய போது மனுதாரர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் மீது பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பிரகாஷ் ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மருத்துவ குழுவினரை நியமித்து மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் எப்படி சிறைக்குள் செல்கின்றன என்பது குறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
The post சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் எப்படி கொண்டு செல்லப்படுகிறது? சிறைத்துறை டிஜிபி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.