சிறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை

1 week ago 3

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறை காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன்கள் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், தமிழகம் முழுவதும் சிறைகளில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் எந்த சிறைகளின் அதிகாரிகளின் வீடுகளிலும் சிறைக்காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆர்டர்லி முறையை ஒழிக்க விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். சிறைத்துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதை போல காவல்துறையிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

The post சிறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article