சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம்!

5 hours ago 2

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 4 பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்.

அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பல்வேறு அதிரடி நடவடிக்கையிலும் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் சிந்து நதி நீரை நம்பியே உள்ளன.

இந்தியாவின் இந்த நடவடிக்கை போர் அறிவிப்பிற்கு சமம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார்.

 

The post சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம்! appeared first on Dinakaran.

Read Entire Article