சித்தேரி மலைப்பகுதியில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகள்: விவசாயிகள் கவலை

2 months ago 12

அரூர்: சித்தேரி மலைப்பகுதியில் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் கூட்டம், விவசாய நிலங்களுக்குள் புகுந்த பயிர்களை நாசம் செய்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறையினர் பார்வையிட்டு, அரசின் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தேரி மலைப்பகுதியில், 63 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மலைவாழ் மக்கள். விவசாய தொழில் செய்து வருகின்றனர். தற்போது நிலத்தில் சாமை, ராகி, துவரை, அவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். சித்தேரி மலைப்பகுதியில் வனத்தில் காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளது. வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்திற்குள், அடிக்கடி நுழையும் காட்டெருமைகள் பயிர்களை நாசம் செய்து விட்டு செல்கிறது.

குறிப்பாக இரவு நேரத்தில் காட்டெருமைகள் கூட்டமாக வந்து, பயிர்களை நாசம் செய்து விட்டு செல்கிறது. விவசாயிகள் இரவு முழுவதும் விழித்திருந்து டார்ச் லைட் அடித்தும், டமாரத்தில் சத்தம் எழுப்பியும், காட்டெருமைகளை விரட்டுகின்றனர். பயிர்களை அறுவடை செய்யும் வரை, இது போன்று இரவில் தூக்கத்தை தொலைத்து, காட்டெருமைகளை விரட்டினால் தான், பாதி அளவுக்காவது பயிர்கள் மிஞ்சும் என விவசாயிகள் தெரிவித்தனர். விளை நிலங்களை ஒட்டிய பகுதியில், தடுப்பு வேலி அமைத்தாலும் பயனில்லை. எனவே வனத்துறையினர் இரும்பு வேலி அமைத்து தருவதுடன், காட்டெருமைகளால் சேதமான பயிர்களுக்கு, அரசின் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சித்தேரி மலைப்பகுதியில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகள்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article