சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் பவனி வந்த பெருமாள்

1 day ago 4

திருப்புத்தூர், மே 14: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான விழா கடந்த ஏப்.30ம் தேதி இரவு திருமுனை நகர சோதனை ஆகிய பூர்வாங்க பணிகள் நடந்தன. மே 1ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. இரவில் காப்புக் கட்டப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது.

தொடர்ந்து தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி சிம்மம், அனுமார், கருட சேவை, சேஷ, வெள்ளி யானை, குதிரை, தங்க தோளுக்கியானில், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. 9ம் நாள் திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடந்தது. 10ம் நாள் தேரோட்டம் நடந்தது. 12ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சிம்ம மண்டபத்தில் இருந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து பூ பல்லக்கு மேளதாளங்களுடன் அக்ரஹாரம், தெற்கு தெரு, மேலத்தெரு, வடக்குத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா பவனி நடைபெற்று மீண்டும் கோயிலை அடைந்தது.

பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வேதப்பாராயணங்கள் பாடப்பட்டு பெருமாள் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் பவனி வந்த பெருமாள் appeared first on Dinakaran.

Read Entire Article